Wednesday, October 26, 2011

கூடங்குளம் தமிழரின் எதிர்கால கல்லறை

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும் அதில் அபாயம் இல்லை என்றும் நிறைய விஞ்ஞானிகள் அதாவது முதலாளிதுவத்தின் அடியாட்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்லவே முன்னதாக பசுமை புரட்சி,பிடிகத்திரிக்காய் தொடங்கி நமக்கெல்லாம் பற்பல சமுதாய சீர்கேடுகளை பற்றி விளாவாரியாக புரியவைத்தவர்கள்தானே.

விஞ்ஞானிகள் நன்கு படித்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிதுவத்துக்கும் எப்படி அடிவருடிகளாக நடந்துக்கொள்வது என்று நன்கு கற்று தேர்ந்தவர்கள். அதே கலையை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுவது எப்படி என்பதையும் நன்கு அறிவார்கள்.விஞ்ஞானிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை அவர்களும் நம்மைபோன்றவர்களே என்ன ஒரு வேறுபாடு அவர்கள் புளித்த ஏப்பகாரர்கள்!நாம் அத்த பசிக்காரர்கள் அவ்வளவுதான்.

இவர்களைவிட மிகுந்த அறிவார்ந்த விஞ்ஞானிகளை கொண்டதும், இதுவரை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொடுத்ததுமான ஜெர்மன் நாடு அணு உலைகள் ஆபத்தானவை என்று முடிவெடுத்து தங்களது அணு உலைகளை 2022ம் ஆண்டுக்குள் மூடிவிடுவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் தொடங்கியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் அணு உலைகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளன. புகுஷிமா விபத்திற்கு பிறகு தங்கள் நாட்டில் கட்டப்பட்டுவரும் அணு உலைகளை ஜப்பான் நிறுத்திவிட்டதோடல்லாமல், முன்னதாக இயங்கிக்கொண்டிருந்த 28 அணு உலைகளையும் மூடிவிட்டார்கள்.

மின்னனுவியலிலும், அணுவியலிலும் கைதேர்ந்த ஜப்பானுக்கே அணு உலைகள் குறித்து பீதி கிளம்ப, தங்களால் அணு உலைகளை சரிவர பராமரிக்க இயலாது என்றும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் அணு உலைகளையும் பாதிக்கும் என்பதையும் வெட்கம் விட்டு ஒப்புக்கொண்டு தங்களது அணு உலைகளை மூடிகொண்டிருக்கும் தருவாயில் ஒரு மின்கலத்தையே சரியாக பராமரிக்க தெரியாமல் வெய்யில் காலங்களில் வெடிக்கவைத்து நகரங்களை இருளில் முழ்கடிக்கும் நம் கைதேர்ந்த விஞ்ஞானிகள்தான் இன்று கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை (அவர்களுக்கு இல்லைதான் அவர்கள் எல்லாம் வெளிநாட்டிக்கு குடிபெயரப் போரவர்கள்தானே) என்று நமக்கு தெளிவாக விளங்கும்வரை பாடம் நடத்த போகிறார்களாம்.

அணு உலைகுறித்த வாக்கெடுப்பில் உலகமக்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்புகளையும், அமைக்கவேண்டாம் என்கிற கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அறிவாலிகள்.

மேற்கு வங்களத்தில் ஹரிப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட இருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டார் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. 'மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலை இனி அமையாது’ என்றும் அறிவித்து விட்டார்.

ஆனால் கூடங்குளத்தில் அமைக்க இருக்கும் அணு மின் நிலையத்திலிருந்து கேரளா, கருநாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மின்சாரம் தரக்கூடிய அணு உலையினை கேரள மக்களே வேண்டாம் இங்கே அமைக்கக்கூடாது என்று அடித்துவிரட்டியதும் அது தமிழநாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கேரளாவில் இனி அணு உலை அமைக்க விடமாட்டோம் என்று அறிவித்தும் விட்டார்கள்.

தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றும், அவர்களின் முதலமைச்சர்கள் காசுக்காக இனத்தைவிற்பவர்கள் என்றும் டெல்லி கட்சிகளின் கூட்டிகொடுக்கும் மாமாக்கள் நிறைந்த இடம் என்றும் நன்கு அறிந்தவர்கள் வெளிநாட்டு பெரு முதலாளிகள். கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையில் மின்சாரம் மட்டுமின்றி எதிர்காலத்தில் சல்பேட்,அமோனியா போன்ற மனிதனுக்கு அழிவையும், உடல், மனரீதியான பலவீனத்தினை தரக்கூடிய இரசாயனங்களை தயாரிக்க உள்திட்டம் இருப்பதாகவும் மக்கள் அஞ்சுவது நியாயமானதே.

முன்னதாக இந்திய அளவில் நாம் போபாலில் இழந்த மனித உயிர்கள் ஆயிரகணக்கில், உடல் மற்றும் மன உலைச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இன்னும் தமிழக அளவில் சிப்காட் அதைசுற்றி வாழும் மக்களை புற்றுநோய் தொடங்கி கண்ணுக்கு தெரிந்த, தெரியாத நோய்களையும் பரப்பிவந்தாலும் அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கும் துறைமுகத்தில் உள் தயாரிப்பாக "சல்பேட்" தயாரித்து அனுப்புவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருப்பதும் அவர்களை சமாதான படுத்துவதற்காக உள்ளூர்காரர்களுக்கு வேலைதருவதாக சொல்லும் பொய்யை நம்பாததும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

முத்தாய்ப்பாக இன்று தீபாவளி இல்லையா இதுவே உதாரணம் அணு உலை அமைத்து ஏதாவதொரு தினத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க இப்பவே அடிக்கல் நாட்டுவிழா வேலைகள் நடக்கிறது என்றால் மிகையில்லை. இந்தியாவை பொருத்தவரை தமிழர்கள் அனைவரும் நரகாசூரர்களே.

கீற்றுவில் என் வெளியான கட்டுரை.

No comments:

Post a Comment