Tuesday, August 20, 2013

பேரா.பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ்...

சமூகம், அரசியல், மதம், சாதி, கடவுள் குறித்த எனது மறு வாசிப்புகளும், தீவிர தேடல்களும், மனிதயினத்திற்கு இக்குறியீடுகள் ஏற்படுத்திவைத்திருக்கும் மாற்றங்களும், சக மனிதனிடமே நிகழ்த்தப்படும்  பகடை விளையாட்டுகளும் என்னுள் அலை அலையாய் மாற்றங்களை கொண்டுவந்த எனது பகுத்தறிவு அகவை வளர் கால கட்டத்தில் மக்கள் அரசியல், பொதுவுடமை, பகுத்தறிவு என என் கவனம் திரும்பி பயணிக்க தொடங்கியபோது  தான் ஒரு ஒலி நாடாவின் பெரியாரிய கருத்துகள் மூலம் அய்யா பெரியார்தாசன் எனக்கு அறிமுகமாகிறார். (இதுவரை நேரில் சந்தித்ததில்லை, வாய்ப்புகிடைத்தும் தவிர்த்துவிட்டதும் நிகழ்ந்திருக்கிறது)

அய்யா பெரியார் தாசன் தனது பகுத்தறிவு கருத்து மிக்க பேச்சாலும், எதிர் அரசியலில் ஆய்வுமிக்க பல வினாக்களாலும், மதவாத அரசியல்மீதும், மக்கள் விரோத போக்குமீதான எதிர் விணைகளாலும் என்னை கவர்ந்த பேச்சாளர்களில் ஒருவரானார். அதுவே காலப்போக்கில் அவர்தம் தனிபட்ட கருத்து மாற்றங்களால் இடம்விட்டு இடம் பெயர்ந்துக்கொண்டே இருந்தபோக்கு என்னை அவர்தம் கருத்துகளிலிருந்து சற்று தள்ளிவைத்தது என்பதும் உண்மை.

இறுதியாக அவர் இசுலாத்தை ஏற்றபோது "முஸ்லீம்கள் தங்களுக்காக வாதிடும் ஒரு அறிஞரை இழந்துவிட்டார்கள்" என்றும், இனி அப்துல்லாவாக அவர் இசுலாமிய மக்களுக்கு ஆதரவாக அரசியல் பேச இயலாது என்றும் எழுதினேன். இதனால் நான் ஏதோ அவர் இசுலாத்தை தழுவியதற்காக வெருப்பில் பேசுவதாக பல விமர்சனங்களுக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் நான் வைத்த கருத்துபோலவே இசுலாத்தை தழுவியப்பிறகு அவரின் மக்கள் அரசியல் பேச்சுகள் தவிர்க்கப்பட்டு ஆன்மீக ஏற்பு/தொடர்வு பற்றின பேச்சுகளே நிறைந்திருந்தன.
 
ஒருவர் மீதான கருத்து என்பது அவர்தம் தனிமனித சுதந்திரத்தின் பரிணாமங்களில் எவற்றிலாவது சார்புறும் போது அவர்மீது கொண்ட பொது பார்வையினால் வைக்கப்படுவதாகவே கருதுகிறேன். நானும் அதே எண்ணத்தில் தான் கருத்து பகிர்ந்தேன். இதற்காக என்னை கருகியவர்கள் ஏராளம் ஒரு கட்டத்தில் பெரியார்தாசனே மாறிவிட்டார் நீ என்ன சொல்லுகிறாய் என்கிற ரீதியிலான வினாக்களை வீசியவர்களும் உண்டு. 

அவர்களுக்கெல்லாம் என் விடை 'மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதாகவும், பெரியார்தாசன் பெரியார் அல்ல என்பதாகவும் இருந்தது. அவர் எத்தனை பகுத்தறிவு கருத்துகளை பேசிவந்தாலும் அவரை எந்த இயக்கமோ, திராவிட கட்சிகளோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கான காரணமே அவருக்குள் நிகழும் ஒரு நிலையற்ற மாற்றங்களே என்பதும் என் கருத்து.

ஒரு மாசற்ற அறிஞர் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார் என்று கவலையுறுகிற அதேவேலை தன்னை "பெரியாரிய தோழர்கள் தாக்கலாம்" என்கிற புரட்டும் அதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பாதுகாப்பு வேண்டியதும் என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. துறவரத்தில் பகுத்தறிவை துறப்பதும் ஒரு நிலையோ?

அன்னாரை பிரிந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

No comments:

Post a Comment