Saturday, October 20, 2007

கடவுள்கள் உண்டு

கடவுள்கள் இல்லையென்று
கத்திக் கொண்டிருந்தவன்தான்

தேடிப்பார்த்துவிடலாம் என்று
தெருவில் இறங்கிவிட்டேன்

கோயில், குளம், மசூதி,
தேவாலயம் என்று
எங்கெல்லாமோ
தேடித் தேடித் தேடி

தொங்கிப்போன முகத்தோடு
தொடர்வண்டி நிலையம் வந்தேன்

பறந்துகொண்டிருக்கும் உலகில்
பதற்றமேயின்றி
"பீ" அள்ளிக் கொண்டிருந்தான்
என் பிதாமகன்

அடப்பாவிகளா
கடவுள் இல்லையென்கிறீர்களே
உருப்படுவீர்களா நீங்கள்

அப்ப நாற்சந்திகளில்
நரகலை அள்ளிக்கொண்டிருப்பவர் யார்?

No comments:

Post a Comment